தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியம்- கலெக்டர் சி.கதிரவன் தகவல்


தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியம்- கலெக்டர் சி.கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 23 May 2021 12:03 AM GMT (Updated: 23 May 2021 12:16 AM GMT)

ஈரோடு மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தி ஆகியவற்றை உயர்த்தும் வகையில் விவசாயிகளின் வருவாயை மும்மடங்காக்கும் நோக்கத்துடன் பல்வேறு திட்டங்கள் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படுகின்றன. நீர்ப்பற்றாக்குறையை சமாளித்து குறைந்த அளவு நீரைக்கொண்டு அதிக பரப்பில் சாகுபடி மேற்கொள்ளவும், நீர்வழி உரமிடுதல் மூலம் அதிக உற்பத்தியை பெறுவதற்கும் சொட்டு நீர்ப்பாசன அமைப்பு அமைத்திட விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. ஆள்பற்றாக்குறை, குறைந்த தண்ணீர் தேவை, உரங்கள் விரயமாவதை தடுத்தல், களைக்கட்டுப்பாடு போன்ற அனுகூலங்கள் மூலம் விவசாயிகள் அதிகளவு உற்பத்தி செலவை குறைத்து மிகுந்த லாபமடைய ஏதுவாக உள்ளது.

தோட்டக்கலைத்துறை மூலம் அனைத்து வகையான பயிர்களுக்கும், குறிப்பாக வீரிய ரக காய்கறிகள் சாகுபடி செய்திட ஏக்கருக்கு ரூ.200 ஆயிரமும், மஞ்சள் சாகுபடியினை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.12 ஆயிரமும் மானிய உதவி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் பழங்கள், வாசனைப்பயிர்கள், மலர்கள், மலைத்தோட்டப்பயிர்கள் ஆகிய பயிர்களுக்கு பரப்பு விரிவாக்கம், உற்பத்தி அதிகரித்தல், அறுவடைக்குப்பின் சார்ந்த தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் நடவுப்பொருள் முதல் அறுவடை வரை பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நிரந்தரமாக காய்கறி சாகுபடி செய்ய நிழல்வலை அமைக்க சதுர மீட்டருக்கு ரூ.355 வீதம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. வயல்களில் பழங்கள் மற்றும் காய்கறிகளை பறவைகளினால் ஏற்படும் சேதாரத்தினை தடுக்க பறவை தடுப்பு வலைகள் 5 ஆயிரம் சதுர மீட்டரில் அமைக்க மானிய உதவி வழங்கப்படுகிறது.

அறுவடைக்கு பிந்தைய சேதாரத்தினை தடுக்க குறைந்த விலையிலான வெங்காய சேமிப்பு கிடங்குகள் அமைத்திட 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட அலகு ஒன்றுக்கு ரூ.87 ஆயிரத்து 500-ம், 600 சதுரஅடி அளவுள்ள சிப்பம் கட்டும் கூடம் அமைத்திட ரூ.2 லட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது. குறைந்த பரப்பில் அதிக லாபம் தரக்கூடிய பந்தல் காய்கறி சாகுபடி செய்வதற்கு தேவையான நிரந்தர பந்தல் அமைக்க 50 சதவீதம் மானியமாக ஏக்கருக்கு ரூ.2 லட்சம் அளிக்கப்படுகிறது.

இதுபோல் பண்ணை எந்திரமயமாக்கல் இனத்தின் கீழ் எந்திர தளவாடங்கள் மற்றும் மினி டிராக்டர், பவர்டில்லர் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் விவசாயிகள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து கொள்ள தமிழக அரசு உழவன் செயலி என்றபெயரில் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த செயலியை விவசாயிகள் தங்களது செல்போனில் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து மிக எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலி மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான திட்டங்களில் பயனடைய முன்னுரிமை பதிவேட்டில் பதிவுசெய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த பேரிடர் காலத்தில், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி குறித்த ஆலோசனை மற்றும் திட்டங்கள் பற்றிய தகவல் அறிந்து பயன்பெறலாம்.
விவசாயிகள் தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை, ஈரோடு -94455 12170, மொடக்குறிச்சி- 99947 89202, கொடுமுடி -97870 45557, பவானி -99409 43079, அம்மாபேட்டை- 97507 51385, அந்தியூர் -94427 55132,
பெருந்துறை -97906 11101, சென்னிமலை -97870 45557, கோபி - 93621 19780,
டி.என்.பாளையம்- 80721 02951, நம்பியூர்- 94867 94383, பவானிசாகர் - 98427 28398,
சத்தியமங்கலம் -90959 50500, 90475 07527, தாளவாடி -96886 75883 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

Next Story