சென்னிமலையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அமைச்சர்கள் ஆய்வு


சென்னிமலையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அமைச்சர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 23 May 2021 12:42 AM GMT (Updated: 23 May 2021 12:42 AM GMT)

சென்னிமலையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

சென்னிமலை
சென்னிமலையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
ஆய்வு 
சென்னிமலை அருகே பி.காசிபாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு இங்கு பிரசவம் பார்ப்பதுடன் பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
இந்த சுகாதார நிலையத்துக்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்ய வந்தனர்.
அவர்களுடன் ஈரோடு கலெக்டர் சி.கதிரவனும் வந்திருந்தார். அங்கு கொரோனா நோயாளிகளை பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் சுகாதார நிலையம் உள்ளதா? என்பதை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
300 படுக்கைகள்
பின்னர் சென்னிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் சென்றனர். அங்கு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் 20 படுக்கைகள் அமைக்கப்படுகிறது.   இதனை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். 
அதைத்தொடர்ந்து சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளிக்கு சென்றனர். அங்கு ஆண்கள், பெண்கள் என 300 கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 30 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இவற்றை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
ஒத்துழைப்பு
முன்னதாக அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களிடம் கூறுகையில், ஈரோடு மாவட் டத்தில் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா நோயாளிகளுக்காக 3 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இதில் 950 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளது. இந்த படுக்கைகளை கொேரானா நோயாளிகள் பயன்படுத்த முன் வரவேண்டும். இந்தியா முழுவதுமே தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறையாக உள்ளது.
இதனை சரி செய்வதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதுடன் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணமும் மேற்கொண்டார். கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. 
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா சிகிச்சை மையம்
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறும்போது, 'தமிழகத்தை விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாக மாற்ற அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னிமலை அருகே 1010 நெசவாளர் காலனியில் நோய் தொற்று அதிகமாக உள்ளது. இதனால் புதிதாக சென்னிமலை பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க ஆய்வு செய்து வருகிறோம்' என்றார்.
அப்போது அமைச்சர்களுடன் சுகாதார பணிகளின் துணை இயக்குனர் சவுண்டம்மாள், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், ஆர்.டி.ஓ. சைபுதீன், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் இல.பத்மநாபன், சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ, தி.மு.க ஒன்றிய நிர்வாகிகள் பி.செங்கோட்டையன், எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சி.பிரபு, ஒன்றிய துணைத்தலைவர் பன்னீர்செல்வம், சென்னிமலை கொங்கு பள்ளி நிர்வாகிகள் எம்.எம்.கந்தசாமி, காயத்ரி மணி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story