லெட்சுமாங்குடியில் வெண்ணாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


லெட்சுமாங்குடியில் வெண்ணாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 23 May 2021 6:12 AM GMT (Updated: 23 May 2021 6:12 AM GMT)

லெட்சுமாங்குடியில் வெண்ணாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி பாலம் அருகே வெண்ணாறு உள்ளது. இந்த ஆற்றில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் கோடைக்காலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் மாசு படர்ந்த தண்ணீராக மாறி உள்ளது. மேலும் செடிகள் அதிகளவில் இருப்பதால் தேங்கி நிற்கும் தண்ணீரில் துர்நாற்றம் வீசுகிறது. ஆகாய தாமரை செடிகள் சில அழுகி போய் இருப்பதால் கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அருகே வீடுகளில் வசிப்பவர்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தண்ணீர் கொண்டு செல்வதில் சிரமம்

ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆகாய தாமரை செடிகள் குறிப்பிட்ட இடங்களில் வெண்ணாற்றில் தேங்கி கிடப்பது வாடிக்கையாக உள்ளதாகவும், இதனால் ஆற்றில் தண்ணீர் திறக்கும் போது ஆகாய தாமரை செடிகள் தண்ணீரை கடைமடை பகுதி வரை முழுமையாக செல்லாதவாறு தடுத்து நிற்பதாகவும், இதனால் விவசாய நிலங்களுக்கு போதிய தண்ணீரை கொண்டு செல்வதில் கூட சிரமம் அடைவதாகவும் அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பே வெண்ணாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

Next Story