ஊரடங்கில் பொருட்கள் வாங்க ரேஷன் கடையில் கூடிய பொதுமக்கள் கடை திறக்காததால் ஏமாற்றம்


ஊரடங்கில் பொருட்கள் வாங்க ரேஷன் கடையில் கூடிய பொதுமக்கள்  கடை திறக்காததால் ஏமாற்றம்
x
தினத்தந்தி 24 May 2021 6:18 PM GMT (Updated: 24 May 2021 6:18 PM GMT)

ஊரடங்கில் பொருட்கள் வாங்க ரேஷன் கடையில் பொதுமக்கள் கூடினர்.

கீரமங்கலம்:
கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, சரக்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 7 மணி முதலே பொதுமக்கள் கூடத் தொடங்கிவிட்டனர். 9 மணிக்குள் சுமார் நூறுக்கு மேற்பட்டவர்கள் கூடி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த அப்பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் திரண்டிருந்த ரேஷன் கடைக்கு வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, முழு ஊரடங்கு வரை ரேஷன் கடைகள் திறப்பு இல்லை என்று கூறியுள்ளனர். அதனால் அறிவிப்பு பலகையில் முழு ஊரடங்கு காரணமாக மே 24 முதல் 31-ந் தேதி வரை கடை விடுமுறை என்று எழுதி போட்டுள்ளனர். நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் தற்போது கடை திறக்கவில்லை என்றால் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை ஜூன் மாதத்தில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஏமாற்றத்துடன் களைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், நிவாரணம் வழங்க டோக்கன் வழங்கியது போல கூட்டத்தை தவிர்த்து டோக்கன் வழங்கி பொருட்கள் வழங்கலாம். மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அனுப்பியுள்ளோம். அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story