சாலையோரம் தங்கி இருப்பவர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் திட்டம் அமைச்சர் சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி. தொடங்கி வைத்தனர்


சாலையோரம் தங்கி இருப்பவர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் திட்டம் அமைச்சர் சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி. தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 27 May 2021 12:04 AM GMT (Updated: 27 May 2021 12:04 AM GMT)

சாலையோரம் தங்கி இருப்பவர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னை,

கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நோய் பரவல் சங்கிலியை துண்டிப்பதற்காக அரசு தளர்வுகளின்றி முழு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது.

எந்த கடைகளும் திறக்க அனுமதி கிடையாது என்று அரசு சொல்லிவிட்டது. முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் சாலையோரம் தங்கி இருப்பவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக “தினத்தந்தி”யில், “வேலையின்றி, வருமானமின்றி ஊரடங்கால் ஓய்ந்துபோன தினக்கூலி தொழிலாளர்கள்” என்ற தலைப்பில் அவர்களின் வாழ்வாதார நிலை குறித்து செய்தி வெளியானது.

உணவு வழங்கும் திட்டம்

அந்த செய்தி எதிரொலியாக சாலையோரம் தங்கி இருப்பவர்களுக்கும், தினக்கூலி தொழிலாளர்களுக்கும் உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதாகவும், அதன்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு இடங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அந்த வகையில் ‘தினத்தந்தி’ செய்தியில் சுட்டிக்காட்டியிருந்த எழும்பூர் ஈ.வெ.ரா. பெரியார் சாலைப்பகுதியில் தங்கி இருந்தவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உடன் இருந்தார்.

அதன்படி, சாலையோரம் வருமானமின்றி தங்கி இருந்த சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இதுதொடர்பாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

தினந்தோறும் வழங்கப்படும்

கொரோனா ஊரடங்கு காலத்தில் யாரும் உணவின்றி தவிக்கக்கூடாது என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடுத்து வருகிறார்.

‘தினத்தந்தி’ நாளிதழில் சாலையோரம் தங்கி இருப்பவர்கள் உணவின்றி தவிப்பதாக செய்தி வந்தது. அந்த செய்தி அறிந்தவுடன், முதல்-அமைச்சர் வழிகாட்டுதல்படி, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஏற்பாட்டில் இங்கு உணவு வழங்குகிறோம்.

இதன் நோக்கம் யாரும் உணவின்றி தவிக்கக்கூடாது என்பதுதான். சாலையோரம் வசிப்பவர்களுக்கு தினந்தோறும் உணவு இதுபோல் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story