கொரோனாவுக்கு 5 பேர் பலி


கொரோனாவுக்கு 5 பேர் பலி
x
தினத்தந்தி 27 May 2021 4:57 PM GMT (Updated: 27 May 2021 4:57 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு 5 பேர் இறந்தனர். மேலும் புதிய உச்சமாக 798 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 31,156 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 221 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 27,015 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 3,920 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செஞ்சியை சேர்ந்த 54 வயதுடைய நபரும், விழுப்புரம் முருகையன் லே-அவுட்டை சேர்ந்த 80 வயதுடைய முதியவரும், செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த 75 வயதுடைய முதியவரும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விழுப்புரம் சிவபாளைய தெருவை சேர்ந்த 73 வயதுடைய முதியவரும், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெள்ளாளப்பட்டியை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 221-ல் இருந்து 226 ஆக உயர்ந்துள்ளது.

798 பேருக்கு தொற்று

மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக 798 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,954 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 526 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27,541 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 4,187 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story