ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் காய்கறிகள், பழங்களை விவசாயிகள் இருப்பு வைக்கலாம் கலெக்டர் கார்மேகம் தகவல்


ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் காய்கறிகள், பழங்களை விவசாயிகள் இருப்பு வைக்கலாம் கலெக்டர் கார்மேகம் தகவல்
x
தினத்தந்தி 27 May 2021 10:33 PM GMT (Updated: 27 May 2021 10:33 PM GMT)

காய்கறிகள், பழங்களை விவசாயிகள் இருப்பு வைக்கலாம்

சேலம்:
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் காய்கறிகள், பழங்களை விவசாயிகள் இருப்பு வைக்கலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள்
விவசாயிகள் தங்களுடைய விளைப்பொருட்களை எந்தவித பிடித்தங்களும் இன்றி நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்கு ஏதுவாக தமிழக அரசால் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் சேலம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, சங்ககிரி, கொங்கணாபுரம், கொளத்தூர், மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி, எடப்பாடி ஆகிய 14 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 18 ஆயிரத்து 900 மெட்ரிக் டன் விளைப்பொருட்கள் இருப்பு வைக்கும் அளவிற்கு 23 சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 17 நாட்களுக்கு இருப்பு வைத்து கொள்வதற்கு விவசாயிகளிடம் இருந்து எந்தவித வாடகையும் வசூலிக்கப்படுவதில்லை. அடுத்த நாள் முதல் ஒரு குவிண்டாலுக்கு 5 பைசா என குறைந்த அளவில் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. 
பொருளீட்டு கடன்
மேலும் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 89 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 3 லட்சம் பொருளீட்டு கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர், வாழப்பாடி, கெங்கவல்லி மற்றும் மேச்சேரி ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 7 குளிர்பதன கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. 
இந்த குளிர்பதன கிடங்குகளில் விவசாயிகள் தங்களது காய்கறிகள் மற்றும் பழங்களை இருப்பு வைத்துக் கொண்டு பின்னர் விற்பனை செய்யலாம். இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இதுதொடர்பாக கூடுதல் தகவல்களை பெற ஒழுங்குமுறை விற்பனை கூட பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Next Story