விழுப்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


விழுப்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
x
தினத்தந்தி 28 May 2021 6:12 PM GMT (Updated: 28 May 2021 6:12 PM GMT)

விழுப்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

விழுப்புரம்

முத்துமாரியம்மன் கோவில்

விழுப்புரம் வடக்கு தெருவில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நிர்வாகியாக அதே பகுதியை சேர்ந்த ராமு (வயது 52) என்பவர் இருந்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கினால் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பூசாரிகள் மட்டும் அன்றாடம் கோவிலை திறந்து சாமிக்கு வழக்கமாக நடைபெறும் பூஜைகளை எளிமையாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ராமு, அந்த கோவிலில் வழக்கமாக சாமிக்கு பூஜைகளை செய்து முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவர் கோவிலை திறக்க வந்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

பணம் கொள்ளை

உடனே உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பக்தர்களின் காணிக்கை பணம் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர், விழுப்புரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இந்த உண்டியலில் பக்தர்களின் காணிக்கை பணம் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story