வெள்ளோட்டில் 2 வீடுகளில் 7¼ பவுன் நகை-பணம் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


வெள்ளோட்டில் 2 வீடுகளில் 7¼ பவுன் நகை-பணம் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 29 May 2021 10:29 PM GMT (Updated: 29 May 2021 10:29 PM GMT)

வெள்ளோட்டில் 2 வீடுகளில் 7¼ பவுன் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சென்னிமலை
வெள்ளோட்டில் 2 வீடுகளில் 7¼ பவுன் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 
மகள் வீட்டுக்கு...
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த வெள்ளோடு நளினி கந்தசாமி நகரை சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது 60). இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரின் மூத்த மகள் சுவாதிகா திருமணமாகி நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையத்தில் வசித்து வருகிறார். இளைய மகள் மதுமிதா கோவையில் உள்ளார். கண்ணம்மாள் கடந்த 9-ந் தேதி மதுமிதா வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கண்ணம்மாளின் மூத்த மகள் சுவாதிகாவும், அவருடைய கணவர் தினகரனும் வெள்ளோட்டில் உள்ள கண்ணம்மாளின் வீட்டிற்கு சென்றனர். 
7¼ பவுன் நகை
அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பீரோ மற்றும் அலமாரி ஆகியவை உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி, தலா 1 பவுனில் இருந்த 4 தங்க மோதிரங்கள், ¼ பவுன் அளவுள்ள மற்றொரு தங்க மோதிரம் என மொத்தம் 7¼ பவுன் நகைகளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் கதவையும், பீரோவையும் உடைத்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தினகரன் வெள்ளோடு போலீசில் புகார் செய்தார். 
மற்றொரு திருட்டு
இதேபோல் வெள்ளோட்டை சேர்ந்தவர் திருமூர்த்தி (56) விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள தனது தோட்டத்திற்கு சென்று விட்டார்.
 பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்புறம் இருந்த ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருந்தது. உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வெள்ளி டம்ளர், பணம் ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து திருமூர்த்தி வெள்ளோடு போலீசில் புகார் செய்தார். 
மேற்படி 2 சம்பவங்கள் குறித்தும் வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story