சேலம் குமாரசாமிப்பட்டியில் இருந்து தடுப்பூசி போடும் முகாம் இடமாற்றம் பொதுமக்கள் அதிகளவு திரண்டதால் நடவடிக்கை


சேலம் குமாரசாமிப்பட்டியில் இருந்து தடுப்பூசி போடும் முகாம் இடமாற்றம் பொதுமக்கள் அதிகளவு திரண்டதால் நடவடிக்கை
x
தினத்தந்தி 29 May 2021 11:58 PM GMT (Updated: 30 May 2021 12:00 AM GMT)

சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பொதுமக்கள் அதிகளவு திரண்டதால் தடுப்பூசி போடும் முகாம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையத்துக்கு தடுப்பூசிகளில் முதல் டோஸ் மற்றும் 2-வது டோஸ் போடுவதற்காக தினமும் ஏராளமானவர்கள் வருகின்றனர். 
குறிப்பாக அவர்கள் காலை 8 மணிக்கே அங்கு வந்து விடுகின்றனர். இதனால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. சில சமயம் தடுப்பூசி போடுவதற்கு கால தாமதம் ஏற்படுவதால் ஊழியர்களுக்கும், அங்கு காத்திருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தற்போது அங்கு அஸ்தம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இடமாற்றம்

இந்தநிலையில் பொதுமக்கள் அதிகளவு கூடுவதை தடுக்க 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை சீரங்கன்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாரதா பாலமந்திர் ஆண்கள் மெட்ரிக் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நோட்டீஸ் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. 
இது தெரியாமல் அங்கு வந்த 18 வயது மேற்பட்டவர்கள் பின்னர் மாற்றப்பட்ட இடத்துக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். அங்கு அவர்கள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டு வரிசையாக சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Next Story