100 வீடுகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமனம்


100 வீடுகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமனம்
x
தினத்தந்தி 30 May 2021 1:52 PM GMT (Updated: 30 May 2021 1:52 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி நோய் தொற்றை கண்டறிய 100 வீடுகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் தன்னார்வலர்கள் நியமிக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சமயமூர்த்தி உத்தரவிட்டார்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி நோய் தொற்றை கண்டறிய 100 வீடுகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் தன்னார்வலர்கள் நியமிக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சமயமூர்த்தி உத்தரவிட்டார்.
கொரோனா தடுப்பு
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான வேளாண்மை உற்பத்தி ஆணையாளர் மற்றும் செயலாளர் சமயமூர்த்தி தலைமையில் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் விஜயகார்த்திகேயன், நகர் ஊரமைப்பு இயக்குனர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி சமயமூர்த்தி பேசியதாவது
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்புக்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த காலகட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அளிக்கும் அறிவுரைகளை ஏற்று கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த ஒத்துழைக்கவேண்டும்.
தன்னார்வலர்கள்
நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மூலம் அமைக்கப்பட உள்ள ஆலோசனை மையங்களில் தங்களுக்கு தேவையான நோய் குறித்த ஆலோசனைகளை பெறலாம்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் அதிகளவு காய்ச்சல் மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டும். 100 வீடுகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய தன்னார்வலர்கள் நியமிக்க வேண்டும். இதன் மூலம் நோயை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர் கண்காணிப்பு
மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா பரிசோதனை மையங்கள், ஆக்சிஜன் படுக்கைகளை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 121 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டு அனைத்திலும் முழுமையாக நோய் தொற்றுகளை கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசு வழங்கும் தடுப்பூசிகளை செலுத்தி நோய் தொற்றிலிருந்து முழுமையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.


Next Story