திறந்த வெளியில் கிடக்கும் கவச உடைகள்


திறந்த வெளியில் கிடக்கும் கவச உடைகள்
x
தினத்தந்தி 30 May 2021 2:23 PM GMT (Updated: 30 May 2021 2:23 PM GMT)

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் பயன்படுத்தப்பட்ட கவச உடைகள், முககவசம் மற்றும் கையுறைகள் ஆகியவை அப்புறப்படுத்தப்படாமல், திறந்த வெளியில் குவிந்தும், சிதறியும் கிடக்கிறது.

உடுமலை
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் பயன்படுத்தப்பட்ட கவச உடைகள், முககவசம் மற்றும் கையுறைகள் ஆகியவை அப்புறப்படுத்தப்படாமல், திறந்த வெளியில் குவிந்தும், சிதறியும் கிடக்கிறது.
கொரோனா சிறப்பு வார்டு
உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 120 படுக்கை வசதிகள் உள்ளன. ஆக்சிஜன் வசதியும் உள்ளது. இந்த நிலையில் கூடுதல் தேவைக்காக உடுமலை எலையமுத்தூர் சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் புதிய வகுப்பறைகள் கட்டிடம் மற்றும் பழைய வகுப்பறை கட்டிட பகுதிகளில்  100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
கவச உடை
அரசு உத்தரவுப்படி, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும்அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் சேகரமாகும் மருத்துவக்கழிவுகளை வெளியில் போடாமல், பாதுகாத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த கழிவுகளை, அரசால் அனுமதி பெற்றுள்ள நிறுவனம் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை வந்து ஒவ்வொரு மருத்துவ மனைக்கும் சென்றுபாதுகாப்புடன் வாங்கி சென்று அழிக்கும். அதன்படிஇந்த பகுதிக்கான நிறுவனம் கோவையில் உள்ளது.
இந்த நிலையில் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில், பணியின்போது பயன்படுத்தப்பட்ட கவச உடை, முககவசம், கையுறை ஆகியவை பாதுகாப்புடன் வைக்கப்படாமல் கொரோனா சிறப்பு வார்டுக்கு சில அடிகள் தூரத்தில் திறந்தவெளியில் குவிந்தும், சிதறியும்கிடக்கிறது
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக, பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய முககவசங்களை சாலைகளில் திறந்த வெளியில் வீசவேண்டாம் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.ஆனால் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும்கொரோனா சிறப்பு வார்டு பகுதியிலேயே, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாமல்,பயன்படுத்தப்பட்ட கவச உடை, முககவசம், கையுறை ஆகியவை பாதுகாப்பு இல்லாமல் திறந்த வெளியில் போடப்பட்டுகிடக்கிறது.இதனால் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது
சுகாதார பணிகள்
அரசு கலைக்கல்லூரி வளாகத்தின் முன்பகுதியில், போடிபட்டி ஊராட்சியின் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டு, கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்.அதேசமயம் கொரோனா சிறப்பு வார்டு அமைந்துள்ள பகுதியில் தூய்மை பணிகள் மற்றும் கிருமிநாசினி தெளிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஊராட்சியில் போதிய நிரந்தரதூய்மை பணியாளர்கள் இல்லை என்றும், அந்த பணியாளர்கள் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இந்த பணிகளை செய்து வருவதாகவும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. அதனால்நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலமாக இந்த சிறப்பு வார்டு பகுதியில் அவ்வப்போது தூய்மை பணிகள் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த கொரோனா சிறப்பு வார்டில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டியது நகராட்சி நிர்வாகமா, ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகமா என்ற நிலை உள்ளது. அதனால் இந்த கொரோனா சிறப்பு வார்டுமற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் தூய்மை பணிகள் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் பணிகளை மேற்கொள்ள பாதுகாப்பு உபகரணங்களுடன் தனியாக சுகாதார ஆய்வாளர் மற்றும் தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும் என  பொதுமக்கள் ஆகியோர் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் உயர் அதிகாரிகளின் அறிவுரைப்படி, உடுமலை அரசு கலைக்கல்லூரி கொரோனா சிறப்பு வார்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.அத்துடன் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. இந்த பணிகளை நகராட்சி ஆணையாளர் தே.கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், நகர்நல அலுவலர்கே.கவுரி சரவணன், சுகாதார ஆய்வாளர் ஆர்.செல்வம் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டனர்.

Next Story