நெமிலி, பனப்பாக்கம் பேரூராட்சிகளில் தடுப்பூசி போட்டால்தான் கடை திறக்க அனுமதி


நெமிலி, பனப்பாக்கம் பேரூராட்சிகளில் தடுப்பூசி போட்டால்தான் கடை திறக்க அனுமதி
x
தினத்தந்தி 30 May 2021 4:22 PM GMT (Updated: 30 May 2021 4:22 PM GMT)

நெமிலி, பனப்பாக்கம் பேரூராட்சிகளில் தடுப்பூசி போட்டால்தான் கடை திறக்க அனுமதி

நெமிலி

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை நகரங்களைக் காட்டிலும் கிராமப்பகுதிகளில் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஆனால் கிராமத்தில் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தின் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமின்றி உள்ளனர். எனவே ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவின் பேரில் நெமிலி மற்றும் பனப்பாக்கம் பேரூராட்சிகளின் சார்பில் கொரோனா தடுப்பூசி குறித்து வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் நெமிலி பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பனப்பாக்கம் பேரூராட்சியில் யோகா மையத்திலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பேரூராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக வியாபாரிகள் மற்றும் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றினை பேரூராட்சியில் இருந்து பெற்றிருந்தால் மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் கடை திறக்க அனுமதிக்கப்படும் என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story