கேரளாவில் புயலில் சிக்கி மாயமான நாகை மீனவர்கள் 23 பேர் சொந்த ஊர் திரும்பினர்


கேரளாவில் புயலில் சிக்கி மாயமான நாகை மீனவர்கள் 23 பேர் சொந்த ஊர் திரும்பினர்
x
தினத்தந்தி 30 May 2021 4:23 PM GMT (Updated: 30 May 2021 4:23 PM GMT)

கேரளாவில் புயலில் சிக்கி மாயமான நாகை மீனவர்கள் 23 பேர் சொந்த ஊருக்கு திரும்பினர். ஆனால் சாமந்தான்பேட்டை மீனவர்களின் நிலை குறித்து தெரியாததால் அவர்களின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

நாகப்பட்டினம்:
கேரளாவில் புயலில் சிக்கி  மாயமான நாகை மீனவர்கள் 23 பேர் சொந்த ஊருக்கு திரும்பினர். ஆனால் சாமந்தான்பேட்டை மீனவர்களின் நிலை குறித்து தெரியாததால் அவர்களின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
புயலில் சிக்கினர்
நாகை ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது50). இவருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில்  அவரும், நாகையை சேர்ந்த 22 பேரும் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதியில் இருந்து கேரளாவில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில்  இவர்கள், கடந்த 14-ந் தேதி கொச்சின் துறைமுகம் அருகே அமனி தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது வீசிய டவ்தே புயலில் சிக்கி 23 மீனவர்களும்  மாயமாகினர். பின்னர் இவர்கள் படகுகளுடன் லட்சத்தீவு பகுதியில் கரை ஒதுங்கினர். 
நாகைக்கு வந்தனர்
இதை தொடர்ந்து நாகை மீனவர்களை  கேரள  மீன்வளத்துறையினர் மீட்டு கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.  அங்கிருந்து   மீனவர்களை  2 படகுகளில் நாகைக்கு அனுப்பி வைத்தனர்.
 கடந்த  25-ந் தேதி  ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனுக்கு  மீனவர்கள் வந்தனர். அப்போது பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்படவில்லை.  இதனால் பாம்பன்  தூக்குப்பாலம் திறக்கக்கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து  நேற்று முன்தினம் பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்பட்டதால் அங்கிருந்து புறப்பட்ட மீனவர்கள் நேற்று நாகை துறை முகத்திற்கு வந்தடைந்தனர். 
அப்போது மீனவர்களை அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்
சாமந்தான்பேட்டை மீனவர்கள்
இந்த நிலையில் கேரளாவில் டவ்தே புயலில் சிக்கி மாயமான நாகை சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (23), அவரது தந்தை இடும்பன்(50), சகோதரர் மணிவேல் (27) மற்றும் தினேஷ் (33), இளஞ்செழியன் (35), பிரவீன் (25), கணேசமூர்த்தி (35)  உள்பட 9 பேரின் நிலை என்ன என்பது  குறித்து எவ்வித தகவல்களும் இன்னும் கிடைக்கவில்லை. இதனால்  மீனவர்களின் உறவினர்களும்,  மீனவ கிராம மக்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.


Next Story