கண்டிப்பாக 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேச்சு


கண்டிப்பாக 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
x
தினத்தந்தி 30 May 2021 4:40 PM GMT (Updated: 30 May 2021 4:40 PM GMT)

கொரோனா பாதிக்காமல் இருக்க கண்டிப்பாக 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பேசினார்.

குடியாத்தம்-

பாதுகாப்பு கிட்

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் குடியாத்தம் துணை கோட்டத்தில் உள்ள குடியாத்தம் நகரம், குடியாத்தம் தாலுகா, அனைத்து மகளிர், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், மேல்பட்டி, பரதராமி ஆகிய போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 196 காவல்துறையினருக்கு கொரோனா பாதுகாப்பு கிட் வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சுரேஷ்பாபு, வெங்கடேசன், முரளிதரன், நந்தினிதேவி, செல்லபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கலந்துகொண்டு 196 போலீசாருக்கு முகக்கவசம், கையுறை, கண்ணாடி, கிருமிநாசினி அடங்கிய கொரோனோ பாதுகாப்பு கிட்களை வழங்கினார். 
அப்போது அவர் பேசியதாவது:-

2-வது டோஸ் தடுப்பூசி

காவல்துறையினர் அதிகளவு பொதுமக்கள் தொடர்பில் இருப்பவர்கள். தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம். காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும். 

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த காவலர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு பல லட்ச ரூபாய் மருத்துவ செலவு செய்துள்ளார். அதனால் கண்டிப்பாக காவலர்கள் அனைவரும் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லாமல் தனிமைப்படுத்திக் கொண்டேன் மாநகராட்சி டாக்டர் பரிசோதனை செய்து மருந்துகள் கொடுத்ததால் குணமாகிவிட்டது. அதற்குக் காரணம் நான் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டது தான். அதனால் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story