பறிமுதல் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு


பறிமுதல் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு
x
தினத்தந்தி 30 May 2021 4:52 PM GMT (Updated: 30 May 2021 4:52 PM GMT)

திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

கே.கே.நகர், 
திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

வாகனங்கள் பறிமுதல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது முழு ஊரடங்கு வருகிற 7-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றும் வாகன ஓட்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தி வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

திருச்சி மாநகரத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 2,600 வாகனங்கள் திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்தந்த போலீஸ்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

மேலும், வாகனங்கள் திருட்டு போகாமல் இருப்பதற்காக ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் இரவு, பகல் என சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர ஆயுதப்படை மைதானத்தை சுற்றி ஆங்காங்கே 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு போலீசார் வாகனங்களை கண்காணித்து வருகிறார்கள்.

தற்போது கோடை காலம் என்பதால் மைதானத்தில் கொளுத்தும் வெயிலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் திடீரென தீப்பற்றி விடக்கூடாது என்பதற்காக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீது காலை, மாலை என இருவேளைகளிலும் வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இதற்காக வஜ்ரா வாகனம் ஆயுதப்படை மைதானத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story