விழுப்புரத்தில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய 90 பேருக்கு கொரோனா தடுப்பூசி


விழுப்புரத்தில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய 90 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 30 May 2021 4:54 PM GMT (Updated: 30 May 2021 4:54 PM GMT)

விழுப்புரத்தில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய 90 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மேலும் பல்வேறு காரணம் கூறி சுற்றியவர்களை போலீசார் கடுமையாக எச்சரித்தனர்.

விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 179 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் ஊரடங்கில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திாிபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், வழக்கு பதிவு செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சிலர் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றித்திரிகின்றனர். அவ்வாறு சுற்றித்திரிபவர்களை போலீசார் மறித்து விசாரிக்கும் போது அவர்கள் தடுப்பூசி போட செல்வதாக கூறி விட்டு சென்று வருகின்றனர். 

கொரோனா தடுப்பூசி

இதனை தடுக்கும் பொருட்டு விழுப்புரம் நகரத்தில் போலீசார் புதுவித முயற்சியை கையாண்டுள்ளனர். அதாவது, தடுப்பூசி போட்டுக்கொள்வதாக கூறி விட்டு செல்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். நேற்று மட்டும் வெளியே சுற்றித்திரிந்த சுமார் 90 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தார்.  மேலும் போலீசாரிடம் முதலில் தடுப்பூசி போட செல்கிறோம் என்று கூறும் பொதுமக்கள் அவர்களை தடுப்பூசி போட அழைத்து சென்றவுடன் நாங்கள் தடுப்பூசி போட்டு விட்டோம் என்று கூறுகிறார்கள். உடனே அவர்களை போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர். போலீசாரின் இத்தகைய முயற்சி அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story