மாவட்டத்தில் கொரோனா விதிகளை மீறிய 13107 பேரிடம் இருந்து ரூ.28 லட்சம் அபராதம் வசூல்


மாவட்டத்தில் கொரோனா விதிகளை மீறிய 13107 பேரிடம் இருந்து ரூ.28 லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 30 May 2021 5:29 PM GMT (Updated: 30 May 2021 5:29 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 13ஆயிரத்து 107 பேரிடம் இருந்து ரூ.28 லட்சத்து 26 ஆயிரத்து 900 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தெரிவித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

13,107 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் கொரோனா தொற்று விதிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாத 12,430 பேர், சமூக இடைவெளியை பின்பற்றாத 677 பேர் என மொத்தம் 13 ஆயிரத்து 107 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ. 28 லட்சத்து 26 ஆயிரத்தி 900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

1,970 வாகனங்கள் பறிமுதல்

தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த 1,920 பேர் மீது வழக்கு பதிவுசெய்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர சாலை விதிகளை கடைபிடிக்க தவறியவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 28 ஆயிரத்து 419 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

4,432 லிட்டர் சாராயம் 

மேலும் கல்வராயன் மலை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொரோனா ஊரடங்கை மீறி மது மற்றும் சாராயம் காய்ச்சுபவர்கள், விற்ற 197 பேர் மீது வழக்கு பதிவு செய்து 4,432 லிட்டர் சாராயம், 3,597 மது பாட்டில்கள் மற்றும் 30,680 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை கைப்பற்றி அழிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று விதிமுறைகளை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story