பயணிகள் இன்றி வெறிச்சோடிய கோவை ரெயில் நிலையம்


பயணிகள் இன்றி வெறிச்சோடிய கோவை ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 30 May 2021 6:01 PM GMT (Updated: 30 May 2021 6:01 PM GMT)

பயணிகள் இன்றி வெறிச்சோடிய கோவை ரெயில் நிலையம்

கோவை

கொரோனா பரவல் காரணமாக ரெயில் சேவை குறைக்கப்பட்டதால் கோவை ரெயில் நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

கோவை ரெயில் நிலையம்

கோவை ரெயில் நிலையம் வழியாக சென்னை, நாகர்கோவில், கேரளா, பெங்களூரு, பீகார் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் கோவை ரெயில் நிலையத்தில் 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. 

அதில் தினமும் சராசரியாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். அதிலும் விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் இருமடங்காக அதிகரித்து விடும். 

அப்போது ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால் கோவை ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

கொரோனா பரவல்

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது சில ரெயில் சேவை நிறுத்தப் பட்டது. அப்போது ரெயில் நிலையத்துக்குள் பயணிகள் யாரும் செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டன. 


பின்னர் கொரோனா பரவல் குறைந்ததால் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது. அதன் மூலம் கோவை ரெயில் நிலையம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கியது. 

இதற்கிடையே கொரோனா 2-வது அலையின் தாக்கம் தீவிரம் அடைந்தது. இதனால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

ரெயில்கள் ரத்து

இதன் காரணமாக ரெயில் மூலம் தொற்று பரவுவதை தடுக்க பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் வெளிமாநிலங்களில் வசிக்கும் பலர் சொந்த மாநிலங்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. மிகவும் குறைவான பயணிகளே ரெயிலில் பயணம் செய்தனர். 

இதன் காரணமாகவும் ரெயில்கள் ரத்து செய்யப் பட்டன. கோவை வழியாக வௌிமாநிலங்களுக்கு ஒருசில ரெயில் மட்டுமே இயக்கப்படுகிறது. 


அந்த ரெயில்களில் பயணம் செய்து சொந்த ஊர்க ளுக்கு செல்ல ஒருசில வடமாநில தொழிலாளர்கள் கோவை ரெயில் நிலையத்தின் வெளியே காத்து கிடக்கின்றனர்.

வெறிச்சோடியது

இதனால் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிய கோவை ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

ரெயில் சேவை இல்லாததால் கோவை ரெயில் நிலையத்தில் உணவு பொருட்களை விற்பனை செய்வோரும் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், வழக்கமாக கோவை ரயில் நிலையம் வழியாக 80- க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படும். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும் பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

ரெயில் சேவை குறைக் கப்பட்டு உள்ளதால் பயணிகளும் ரெயில் நிலையத்துக்கு வருவது இல்லை. இதனால் ரெயில்வே நிர்வாகத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்றனர்.


Next Story