கடலூர் மாவட்டத்தில் 491 வாகனங்கள் மூலம் மளிகைப்பொருட்கள் விற்பனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்


கடலூர் மாவட்டத்தில் 491 வாகனங்கள் மூலம் மளிகைப்பொருட்கள் விற்பனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
x
தினத்தந்தி 30 May 2021 6:14 PM GMT (Updated: 30 May 2021 6:14 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் 491 வாகனங்கள் மூலம் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

தொடர்ந்து அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காய்கறிகள் விற்பனை

கொரோனா ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளோம். மேலும் ஊரடங்கு காலத்தில் தீவிரமாக நோயை கண்டறிய வேண்டுமென்றும் அறிவுறுத்தி உள்ளோம்.

நோய்த்தொற்றை கண்டறிதல், கட்டுப்படுத்துதல், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகிய நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் 39 ஆயிரத்து 564 நடமாடும் வாகனங்கள் மூலம் 13692 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் படுக்கை

மேலும் நோயை தடுக்க கோட்ட, வட்ட, ஊராட்சி அளவில் குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 500 ஆக்சிஜன் படுக்கைகளும், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 220 ஆக்சிக படுக்கை வசதிகளும் உள்ளது.

கடலூரில் மேலும் 100 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் போதுமான அளவு உள்ளது. படுக்கை வசதி இல்லை என்ற நிலை இல்லை.

நடமாடும் வாகனங்கள்

மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு சிரமமின்றி மளிகைப் பொருட்களை வழங்குவதற்காக 435 கடை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 491 நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை வீடு, வீடாக சென்று வழங்குவார்கள்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

ஆக்சிஜன் செறிவூட்டிகள்

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், திட்ட இயக்குனர் மகேந்திரன், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
முன்னதாக தமிழக அரசு கடலூர் மாவட்டத்தில் உள்ள 11 அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கிய 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் இணை இயக்குனர் ரமேஷ்பாபுவிடம் வழங்கினார்.

Next Story