சங்கரன்கோவிலில் கூலி உயர்வு கேட்டு கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்த முயன்ற விசைத்தறி தொழிலாளர்கள் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு


சங்கரன்கோவிலில் கூலி உயர்வு கேட்டு  கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்த முயன்ற விசைத்தறி தொழிலாளர்கள்  போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 May 2021 7:28 PM GMT (Updated: 30 May 2021 7:28 PM GMT)

சங்கரன்கோவிலில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர் வேலைநிறுத்தம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி மற்றும் டி.என்.புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் 19 சதவீத கூலி உயர்வு கேட்டு கடந்த 48 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி உதவி கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் உடன்பாடின்றி வெளியேறினர். ஆனாலும் சில சங்கத்தினர் மற்றும் தி.மு.க. கட்சியினர் முன்னிலையில் 10 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தம் உதவி கலெக்டர் தலைமையில் நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் 

இந்த கூலி உயர்வு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்த போவதாக திடீரென அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 4-வது தெருவில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிறிது நேரத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவதற்காக அப்பகுதியில் குவிந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்ததாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர். தொடர்ந்து தொழிற்சங்கத்தினர் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

வாழ்வாதாரம் இழப்பு

அப்போது அவர்கள் கூறுகையில், “கடந்த முறை நடந்த கூலி உயர்வு பேச்சுவார்த்தையின்போது 15 சதவீத கூலி உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை கொரோனா தொற்று பரவல் காரணமாக பலமுறை தள்ளிப் போடப்பட்டு கடந்த 48 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து பட்டினியால் தவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தான் கஞ்சித்தொட்டி திறக்கும் முடிவுக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்” என்றனர்.

Next Story