வீரவநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இளம்பெண் சாவு


வீரவநல்லூர் அருகே  தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இளம்பெண் சாவு
x
தினத்தந்தி 30 May 2021 7:48 PM GMT (Updated: 30 May 2021 7:48 PM GMT)

வீரவநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

சேரன்மாதேவி:
வீரவநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

ஆற்றுக்கு குளிக்க சென்றனர்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குழியில் தனியார் சிகிச்சை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஓசூர் மாருதி நகரை சேர்ந்த நசீர் பாட்ஷா மகள் ஹாஹின் (வயது 31) என்பவர் தனது மகன் சிகிச்சைக்காக குடும்பத்தினருடன் வெள்ளாங்குழி பகுதியில் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று குடும்பத்தினர் அனைவரும் வீரவநல்லூர் அருகே உள்ள திருப்புடைமருதூர் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஹாஹினின் தங்கை ரேஷ்மா (26) தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இளம்பெண் சாவு

உடனடியாக அவரை காப்பாற்ற அவரது தம்பி சார்யா ரகுமத் சென்று உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரும் ஆற்றில் மூழ்கியுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் கதறி கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் சிறிது நேரத்தில் ரேஷ்மா பிணமாக மிதந்தார்.

இதற்கிடையே இதுபற்றிய தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி தீயணைப்பு நிலைய அலுவலர் வரதராஜன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆற்றில் இறங்கி ரேஷ்மா உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் ரேஷ்மாவின் தம்பி சார்யா ரகுமத்தை தேடினர். இரவு நேரமாகிவிட்டதால் இன்று காலை அவரை தேடும் பணி நடக்கிறது. 

இச்சம்பவம் தொடர்பாக வீரவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சையா வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story