பள்ளி வளாகத்தில் வாலிபர் வெட்டிக்கொலை


பள்ளி வளாகத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 31 May 2021 2:46 AM GMT (Updated: 31 May 2021 2:46 AM GMT)

மணலியில், அரசு பள்ளிக்கூட வளாகத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவொற்றியூர்,

சென்னையை அடுத்த மணலி பாடசாலை தெருவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது இந்த பள்ளி மூடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி வளாகத்தில் பின்பக்கம் உள்ள தண்ணீர் தொட்டிக்கு செல்லும் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை, கை, முதுகு போன்ற இடங்களில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து உள்ளனர்.

அந்த பள்ளி காவலாளி முருகேசன், பள்ளி வளாகத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மணலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

கஞ்சா தகராறு

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர், மணலி அன்பழகன் தெருவைச் சேர்ந்த சாக்ரடீஸ் (வயது 25) என்பது தெரியவந்தது.

மூடிக்கிடக்கும் பள்ளி வளாகத்தில் அப்பகுதியில் உள்ள ஒரு சிலர் கஞ்சா அடிப்பதற்காக வந்திருக்கலாம். அப்போது கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் சாக்ரடீசை அடித்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோப்ப நாய்

மேலும் கீழ்ப்பாக்கத்தில் இருந்து போலீஸ் மோப்ப நாய் ‘சீபா’ சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று சுவர் ஓரத்தில் நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

சம்பவம் குறித்து மணலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story