வாரச்சந்தையில் கடைகளை அகற்றாததால் விவசாயிகள் மீது ஆத்திரம்: காய்கறிகளின் மீது பிளீச்சிங் பவுடரை வீசிய ஊராட்சி மன்ற தலைவி


வாரச்சந்தையில் கடைகளை அகற்றாததால் விவசாயிகள் மீது ஆத்திரம்: காய்கறிகளின் மீது பிளீச்சிங் பவுடரை வீசிய ஊராட்சி மன்ற தலைவி
x
தினத்தந்தி 31 May 2021 5:47 AM GMT (Updated: 31 May 2021 5:47 AM GMT)

வாரச்சந்தையில் கடைகளை அகற்றாததால் விவசாயிகள் மீது ஆத்திரம்: காய்கறிகளின் மீது பிளீச்சிங் பவுடரை வீசிய ஊராட்சி மன்ற தலைவி.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்ரீகாளிகாபுரம் ஊராட்சியில் நேற்று முன்தினம் வாரச்சந்தை கூடியது. இதில் பல விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளைக் கொண்டு வந்து கடையாக அமைத்தனர். தற்போது கொரோனா தொற்று காரணமாக வாரச் சந்தைக்கு அரசு தடை விதித்துள்ளது.

இதையறிந்த ஊராட்சி மன்ற தலைவி சாவித்திரி சேகர் சம்பவ இடத்திற்கு சென்று வியாபாரிகளிடம் காய்கறி கடைகளை உடனடியாக அகற்றும்படி கூறினார். ஆனால் வியாபாரிகள் அவரது பேச்சை காதில் வாங்காமல் தங்களது வியாபாரத்தை தொடர்ந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவி சாவித்திரி சேகர் வியாபாரிகள் வைத்திருந்த காய்கறிகளின் மீது பிளீச்சிங் பவுடரை கொட்டும்படி ஊராட்சி ஊழியர்களுக்கு கூறினார். ஊழியர்களும் அதேபோல் காய்களின் மீது பிளீச்சிங் பவுடரை கொட்டியதால் வியாபாரிகளுக்கும், ஊராட்சி மன்ற ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் விரைந்து சென்று அவர்களிடையே சமரசம் செய்து வைத்தனர். வியாபாரிகளிடம் சற்று கடுமையாக நடந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவி தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து வியாபாரிகள் தங்கள் கடைகளை அங்கிருந்து அகற்றி சென்றனர்.

Next Story