தூத்துக்குடியில் விபத்தில் இறந்த சப்-இன்ஸ்பெக்டர் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம்


தூத்துக்குடியில் விபத்தில் இறந்த சப்-இன்ஸ்பெக்டர் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம்
x
தினத்தந்தி 31 May 2021 1:08 PM GMT (Updated: 31 May 2021 1:08 PM GMT)

தூத்துக்குடியில் விபத்தில் இறந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் உடல் நேற்று போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி, ஜூன்:
தூத்துக்குடியில் விபத்தில் இறந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர்

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன். இவர் அயல் பணி காரணமாக தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு தஸ்நேவிஸ் பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த சுப்பிரமணியன் கடந்த 1988-ம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலராக பணியில் சேர்ந்து பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி பதவி உயர்வு பெற்றவர் ஆவார். இவருக்கு வெங்கடலட்சுமி என்ற மனைவியும், துர்காதேவி என்ற மகளும், செந்தில் முருகன் என்ற மகனும் உள்ளனர்.

அஞ்சலி

இறந்த சுப்பிரமணியன் உடல், அவரது சொந்த ஊரான செக்காரக்குடியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பொன்னரசு, கணேஷ், பிரகாஷ், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் 10 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 30 குண்டுகள் முழங்க போலீசார் அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story