பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நடந்த தடுப்பூசி முகாம் கொரோனா நோயாளிகள் வந்ததால் அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்


பெரியகுளம் அரசு மருத்துவமனையில்  சமூக இடைவெளியை கடைபிடிக்காமல்  நடந்த தடுப்பூசி முகாம் கொரோனா நோயாளிகள் வந்ததால் அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்
x
தினத்தந்தி 31 May 2021 4:01 PM GMT (Updated: 31 May 2021 4:01 PM GMT)

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தடுப்பூசி முகாம் நடந்தது. அப்போது ெகாரோனா நோயாளிகள் வந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பெரியகுளம்:
பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கடந்த பல நாட்களாக கோவாக்சின் தடுப்பூசிகள் அரசு மருத்துமனைக்கு வரவில்லை.
இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்ததால் நேற்று பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி முகாம் நடந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் கோவேக்சின் 2-வது கட்ட தடுப்பூசி போட்டு கொள்வதற்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் வரிசையில் நிற்காமல் ஒருவரையொருவர் முண்டியடித்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றிருந்தனர். 
கொரோனா பரவும் அபாயம்
இந்நிலையில் முதல் தடவையாக கோவிஷீல்டு போடும் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களும் அதே மையத்தில் தடுப்பூசி போடுவதற்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் கூட்டம் மேலும் அதிகரித்தது. இதன்காரணமாக தடுப்பூசி போடுவதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே தடுப்பூசி போடும் அறையின் மற்றொரு வழியாக சிபாரிசின் பேரில் ஏராளமான பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 
இதனால் வரிசையில் காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மேலும் கூட்ட நெரிசலை மருத்துவ பணியாளர்கள், மருத்துவ அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றதால் கொரோனா பரவும் அபாயம் நிலவியது. எனவே சமூக இடைவெளியோடு தடுப்பூசி முகாம் நடத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா நோயாளிகள்
இந்த தடுப்பூசி போடும் மையத்தின் அருகே கொரோனா சிகிச்சை பிரிவு உள்ளது. நேற்று அங்கு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் கவச உடை அணிந்து ஸ்கேன் எடுக்கும் மையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் காத்திருந்த பகுதி வழியாக வந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு அங்கும் இங்கும் ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story