நவீன முறையில் தென்னைக் கழிவுகள் உரமாக்கப்படுவதால் கூடுதல் மகசூல்


நவீன முறையில் தென்னைக் கழிவுகள் உரமாக்கப்படுவதால் கூடுதல் மகசூல்
x
தினத்தந்தி 31 May 2021 4:49 PM GMT (Updated: 31 May 2021 4:49 PM GMT)

உடுமலை பகுதியில் நவீன முறையில் தென்னைக் கழிவுகள் உரமாக்கப்படுவதால் கூடுதல் மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

போடிப்பட்டி
உடுமலை பகுதியில் நவீன முறையில் தென்னைக் கழிவுகள் உரமாக்கப்படுவதால் கூடுதல் மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நுண்ணுயிரிகள்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள தென்னந் தோப்புகளிலிருந்து தேங்காய், இளநீர் போன்றவை விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுகின்றன .இதுதவிர ஓலைகள், மட்டைகள், பாளைகள் போன்ற கழிவுகளை ஆரம்ப காலங்களில் ஒருசிலர் விறகுக்காக எடுத்துச் செல்வதுண்டு. அதன்பிறகு மீதமாகும் கழிவுகளை தீ வைத்து எரிப்பதை விவசாயிகள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இதனால் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் மற்றும் நன்மை தரும் பூச்சியினங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. எனவே தென்னை விவசாயிகளுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து தென்னந் தோப்புகளில் ஆங்காங்கே குழிகள் அமைத்து அவற்றில் மட்டை, ஓலை உள்ளிட்ட கழிவுகளைப் போட்டு மட்க வைத்து உரமாக்கினர்.
மண்ணை வளமாக்கும் உயிரிகள்
தற்போது நவீன எந்திரம் மூலம் தென்னை மரக் கழிவுகளை சிறு சிறு துகள்களாக்கி உரமாக்கும் நவீன முறையை விவசாயிகள் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தென்னந் தோப்புகளில் குழி தோண்டி, கழிவுகளை அதில் போட்டு மக்க வைப்பதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது. அத்துடன் தோப்புகளில் ஆங்காங்கே பெரிய பள்ளங்களாக தோண்டி வைப்பது விவசாயிகளுக்கே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகிறது. இதனைத் தவிர்க்கும் விதமாக தற்போது நவீன எந்திரத்தைப் பயன்படுத்துகிறோம்.இந்த எந்திரம் மூலம் தென்னை மட்டை உள்ளிட்ட கடினமான கழிவுகளையும் சில நிமிடங்களில் சிறு சிறு துகள்களாக அரைக்க முடிகிறது.
இவ்வாறு அரைக்கப்பட்ட துகள்களை தென்னை மரங்களுக்கிடையில் சீராக பரப்பி விடுகிறோம்.அல்லது தென்னை மரங்களைச் சுற்றி குறிப்பிட்ட இடைவெளியில் வட்டமாகப் பரப்புகிறோம். இந்தத் துகள்கள் தென்னை மரங்களுக்குப் பாய்ச்சும் நீரை ஈர்த்துக் கொள்கின்றன. பின்னர் அவற்றிடமிருந்து தென்னை மரங்கள் எடுத்துக் கொள்கின்றன. இதனால் தண்ணீர் பாய்ச்சுவதற்கான கால இடைவெளியை அதிகரித்துக் கொள்ள முடிகிறது. மேலும் இந்த கழிவுகளுக்கு அடியில் ஈரப்பதம் சீராக பராமரிக்கப்படுகிறது.
இதனால் மண் புழு உள்ளிட்ட மண்ணை வளப்படுத்தும் உயிரிகள் பெருக்கம் அதிகரிக்கிறது.மேலும் இவை விரைவில் மக்கி தென்னை மரங்களுக்கு சிறந்த உரமாக மாறி விடுகிறது. தற்போது தென்னந் தோப்புகளைப் பொறுத்தவரை கழிவுகள் என்று சொல்லி எந்த பொருளும் வெளியில் வீசியெறியப்படுவதில்லை .எல்லாமே இங்கு உரமாக்கப்படுவதால் தென்னை மரங்கள் நல்ல மகசூலைத் தருகிறது'.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story