சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டம் பாயும்


சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டம் பாயும்
x
தினத்தந்தி 31 May 2021 5:02 PM GMT (Updated: 31 May 2021 5:02 PM GMT)

சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டம் பாயும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

அன்னவாசல், ஜூன்.1-
சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டம் பாயும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
விழிப்புணர்வு கூட்டம்
சாராயம் காய்ச்சுவதை தடுப்பதற்காக அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முத்தரசு தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் போலீசார், ஊராட்சிமன்ற தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மற்றும் அந்த இடத்தின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பொன்னமராவதி
இதேபோல் பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சாராயம் காய்ச்சுவது பற்றி தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறி பொது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊர் முக்கியஸ்த்தர்கள்  கலந்து கொண்டனர்.
வடகாடு
இதேபோல் வடகாடு அருகே  கருக்காகுறிச்சி தெற்கு பகுதியில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சாராயம் காய்ச்சி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமை தாங்கினார்.
வடகாடு இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஆலங்குடி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் குணவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சாராயம் யாராவது காய்ச்சினால் அவர்களை பற்றி தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தினர்.
கந்தர்வகோட்டை
இதேபோல் கந்தர்வகோட்டை அருகே மஞ்சம்பட்டி கிராமத்தில் புதுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் சாராயம் காய்ச்சுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ்சாராயம் காய்ச்சுபவர்கள் பற்றி தன்னார்வ அமைப்புகள், இளைஞர் மன்றங்கள், பெண்கள், ஊர் பெரியவர்கள் தகவல் தெரிவித்தால் அவர்களது ரகசியம் காக்கப்படு்ம். எனவே சாராயம் காய்ச்சுபவர்கள் பற்றி அச்சம் இல்லாமல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டனர். இதில் கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story