மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தம்பதி பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தம்பதி பலி
x
தினத்தந்தி 31 May 2021 5:27 PM GMT (Updated: 31 May 2021 5:27 PM GMT)

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தம்பதி இறந்தனர்.

திருமயம், ஜூன்.1-
திருமயம் அருகே துக்க வீட்டுக்கு சென்றபோது, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தம்பதி இறந்தனர்.
துக்கம் விசாரிக்க...
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வாதுரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 50). இவரது மனைவி மல்லிகா (40). இந்த நிலையில் திருமயத்தை அடுத்த அரண்மனைபட்டி கிராமத்தில் இவர்களது உறவினர் ஒருவர் இறந்துவிட்டார்.
இதனையடுத்து துக்கம் விசாரிப்பதற்காக பழனிச்சாமி, மல்லிகா மற்றும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் லட்சுமணன் (62) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் அரண்மனைப்பட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை பழனிச்சாமி ஓட்டி வந்தார். புதுக்கோட்டை-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பெல் தொழிற்சாலை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, சிவகங்கை மாவட்டம்  காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
தம்பதி பலி
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி, அவரது மனைவி மல்லிகா ஆகியோர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். லட்சுமணன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் லட்சுமணன் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க வீட்டுக்கு சென்ற தம்பதி விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story