வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் மெகராஜ் தகவல்


வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் மெகராஜ் தகவல்
x
தினத்தந்தி 31 May 2021 5:51 PM GMT (Updated: 31 May 2021 5:51 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுப்பித்தல் சலுகை
2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்க தவறிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்து கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இந்த சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் அரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.5.2021 முதல் மூன்று மாதங்களுக்குள், அதாவது வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினை புதுப்பித்து கொள்ளலாம்.
ஆகஸ்டு 27-ந் தேதி கடைசிநாள்
ஆன்லைன் மூலமாக புதுப்பிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி வரை பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story