தனியார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா பராமரிப்பு மையம்


தனியார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான  கொரோனா பராமரிப்பு மையம்
x
தினத்தந்தி 31 May 2021 5:51 PM GMT (Updated: 31 May 2021 5:51 PM GMT)

நாகர்கோவில் அருகே தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான கொரோனா பராமரிப்பு மையத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான கொரோனா பராமரிப்பு மையத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
32 படுக்கைகள்
நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் அகஸ்திய முனி குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 32 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
வெள்ளமடம் அகஸ்திய முனி குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று 2-வது அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்கின்றது. இதை மனதில் கொண்டு அகத்தியமுனி மருத்துவமனையில் 32 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை பிரிவு நேற்று தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான 32 படுக்கைகளில் 12 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதிகள், 20 படுக்கைகள் சாதாரண வசதிகளுடன் கூடியது. மேலும், கூடுதலாக 18 படுக்கைகள் அமைக்கப்படவுள்ளது.
கொரோனா பெருந்தொற்று நோய்க்கு குழந்தைகளுக்கென தொடங்கப்பட்ட முதல் மருத்துவமனை என்ற சிறப்பை இம்மருத்துவமனை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைக்காக அலைபேசி எண் 9994703383 தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
தடுப்பூசி முகாம்
அதனைத்தொடர்ந்து அவர் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு (எம்.ஐ.சி.யு.), குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு (பி.ஐ.சி.யூ.), மகப்பேறு பிரிவு, சிறப்பு குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
முன்னதாக சுருளகோடு ஊராட்சிக்குட்பட்ட, சுருளகோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாமினை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது அகத்திய முனி மருத்துவமனை தலைவர் குருசு எரோனிமுசு, மேலாண்மை இயக்குனர் பேட்ரிக் சேலியர், மனிதவளத்துறை இயக்குனர் லியோண் கென்சன், பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை டாக்டர் கஜீன் ஹெர்பட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போலீசாருக்கு பாராட்டு
தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் வடசேரி அண்ணாசிலை, மத்தியாஸ்வார்டு பகுதியில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரை நேரில் சந்தித்து அவர்களது பணியினை பாராட்டினார். மேலும் போலீசாரிடம் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு வேணுகோபால் உடன் இருந்தார்.

Next Story