வால்பாறை பகுதியில் 36 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை


வால்பாறை பகுதியில் 36 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை
x
தினத்தந்தி 31 May 2021 6:12 PM GMT (Updated: 31 May 2021 6:12 PM GMT)

வால்பாறை நகர், எஸ்டேட் பகுதிகளில் 36 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வால்பாறை

கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் பால், மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கு காரணமாக எஸ்டேட் தொழிலாளர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் அவர்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

 நகராட்சி பகுதியில் உள்ள காய்கறி, மளிகை கடை வியாபாரிகள் இணைந்து மொத்தம் 36 வாகனங்களில் சுழற்சி முறையில் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வால்பாறை நகர், எஸ்டேட் பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை அந்தந்த பகுதிகளிலேயே பெற்றுக்கொள்ளலாம் என்றனர்.

Next Story