குடியிருப்பு பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டம்


குடியிருப்பு பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டம்
x
தினத்தந்தி 31 May 2021 6:15 PM GMT (Updated: 31 May 2021 6:15 PM GMT)

கோவை காளப்பட்டியில் குடியிருப்பு பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளது. இதையடுத்து அங்கு கேமராக்கள் பொருத்தி விலங்கு நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்

கோவை

கோவை காளப்பட்டியில் குடியிருப்பு பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளது. இதையடுத்து அங்கு கேமராக்கள் பொருத்தி விலங்கு நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். 

மர்ம விலங்கு

கோவை காளப்பட்டி சிவாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தை போன்ற விலங்கு, வீட்டில் வளர்க்கும் கோழிகளை அடித்து தூக்கிச்சென்றது. இதை பார்த்த அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

மேலும் இரவு நேரத்தில் அங்கு சுற்றி வரும் மர்ம விலங்கால் காலை நேரத்தில் நடைபயிற்சி செல்வதையும் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தவிர்த்து உள்ளனர். 

வனத்துறையினர் ஆய்வு 

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கூறும் போது "எங்கள் பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் கூறியதால் இரவில் கண்காணித்தோம் அப்போது 2 அடி நீளம் மற்றும் உயரம் கொண்ட மர்ம விலங்கு உலா வந்ததை பார்த்தோம், 

அது நிச்சயமாக வனவிலங்காக இருக்கலாம், அதனால் வெளியே செல்வதை தவிர்த்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று அதன் கால் தடங்களை ஆய்வு செய்து விலங்கு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
5 கேமராக்கள் பொருத்தம் 

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, காளப்பட்டி பகுதியில் நடமாடும் விலங்கை கண்டுபிடிக்க அங்கு 5 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. 

அதுபோன்று நாங்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர். 


Next Story