ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் 1500 கிராமங்கள் இன்றளவும் தொற்று இல்லாத பச்சைமண்டல பகுதியாகவே நீடித்துவருகிறது


ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் 1500 கிராமங்கள் இன்றளவும் தொற்று இல்லாத பச்சைமண்டல பகுதியாகவே நீடித்துவருகிறது
x
தினத்தந்தி 31 May 2021 6:38 PM GMT (Updated: 31 May 2021 6:38 PM GMT)

1500 கிராமங்களில் கொரோனா தொற்று இல்லை

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் 1500 கிராமங்கள் இன்றளவும் தொற்று இல்லாத பச்சைமண்டல பகுதியாகவே நீடித்துவருகிறது.
தடுப்பூசி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த பரவலின்போது பலர் தொற்றுக்கு உள்ளாகியும், அதிகமானோர் தொற்று இல்லாமல் அறிகுறியுடனும் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நாள் தோறும் பலர் பலியாகி வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. இதன்காரணமாக மாவட்ட நிர்வாகம் அரசின் வழிகாட்டுதலின்படி நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதோடு தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தி வருகிறது. 
இதன்பயனாக தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 ஆயிரம் பேர் வரை நாள்தோறும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 987 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் மாவட்டத்தில் 1628 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுநாள்வரை மாவட்டத்தில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 605 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாள்தோறும் அதிக அளவில் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. அதிக அளவில் பரிசோதனை செய்யப்படுவதால் 300 முதல் 400 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
500 கிராமங்கள்
மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி கோவேக்சின் 430 எண்ணிக்கையிலும், கோவிஷீல்டு 2 ஆயிரத்து 490 எண்ணிக்கையிலும் இருப்பு உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தி தொண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 30 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு 10 ஆக்சிஜன் சிலிண்டர்களும், 3 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் முன்எச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தொடர் நடவடிக்கை கிராம மக்களின் ஒத்துழைப்பு காரணமாக இன்றளவும் 1500 குக்கிராமங்கள் நோய்த்தொற்று பாதிப்பு இல்லாத பச்சை மண்டல பகுதிகளாகவே இருந்து வருகிறது. 
இந்த பச்சை மண்டல பகுதிகளான குக்கிராமங்களில் கொரோனா தொற்று பரவாத வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் சுகாதார மாவட்ட அளவில் 16 பகுதிகள் கொரோனா தொற்று காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளாக உள்ளன. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story