நெல் அறுவடை பணிகள் மும்முரம்


நெல் அறுவடை பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 31 May 2021 6:57 PM GMT (Updated: 31 May 2021 6:57 PM GMT)

சேத்தூர் பகுதியில் நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தளவாய்புரம், 
சேத்தூர் பகுதியில் நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். 
அணைகள் நிரம்பியது 
சேத்தூர், தேவதானம், சுந்தரராஜபுரம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், முகவூர், புத்தூர், சோலைசேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆண்டுதோறும் நெற்பயிரை பயிரிடுவது வழக்கம். இந்த பகுதியில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் போதிய மழை பெய்ததால் இங்கு உள்ள சாஸ்தா கோவில் அணை மற்றும் அனைத்து கண்மாய்களும் நிரம்பியது. 
அறுவடை பணி 
இதனால் இங்குள்ள விவசாயிகள் கடந்த ஆண்டு புரட்டாசி மாதம் நெல் பயிரிட்டு அதனை இந்த ஆண்டு தை மாதம் அறுவடை செய்தனர். 
இதனை அடுத்து இவர்கள் இரண்டாவது மகசூலாக நெற்பயிரை மாசி மாதம் நடவு செய்தனர். தற்போது இதனை அறுவடை செய்யும் காலம் என்பதால் இப்பகுதி விவசாயிகள் நெற்பயிரை அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்கொள்முதல் நிலையம் 
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- 
சேத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற விவசாயிகள் நெல்லை சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.   கடந்த ஆண்டு சேத்தூர், தேவதானம் ஆகிய பகுதிகளில் தமிழக அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு விவசாயிகள் நெல்லை விற்று வருமானம் ஈட்டு வந்தனர். 
இதேபோல் இந்த ஆண்டும் தமிழக அரசு சார்பில் சேத்தூர், தேவதானம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story