யாசகம் பெற்று சேமித்த ரூ.10 ஆயிரத்தை வழங்கிய முதியவர்


யாசகம் பெற்று சேமித்த  ரூ.10 ஆயிரத்தை வழங்கிய முதியவர்
x
தினத்தந்தி 31 May 2021 8:03 PM GMT (Updated: 31 May 2021 8:03 PM GMT)

திண்டுக்கல்லில் யாசகம் பெற்று சேமித்த ரூ.10 ஆயிரத்தை முதியவர் ஒருவர் கொரோனா நிவாரண நிதிக்காக கலெக்டரிடம் வழங்கினார்.

திண்டுக்கல்: 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதற்காக பல்வேறு தரப்பினரும் நிதி வழங்குகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் பலர் ஆர்வமுடன் நிதி வழங்குவது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் நேற்று காவி ஆடை அணிந்த முதியவர் தோளில் பையை சுமந்தபடி, கலெக்டர் அலுவலகம் வந்தார்.

பின்னர் கலெக்டர் விஜயலட்சுமியிடம், கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது பெயர் அந்தோணிசாமி என்ற சரவணன் (வயது 72). திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி எனது சொந்த ஊராகும். நான் திண்டுக்கல்லில் பிறரிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

 தினமும் யாசகத்தில் கிடைக்கும் பணத்தில், எனது செலவு போக மீதியை சேமித்து வைப்பேன்.

அந்த பணத்தை முதியோர் இல்லங்களுக்கு வழங்குவேன். அதன்படி ரூ.10 ஆயிரம் சேமித்து வைத்து இருந்தேன். 

இந்தநிலையில் கொரோனா வைரசால் அனைவரும் சிரமப்பட்டு வருகின்றனர். 

தற்போது என்னை போன்றோருக்கு தன்னார்வலர்கள் தினமும் சாப்பாடு வழங்குகிறார்கள். அதை வாங்கி சாப்பிட்டு வருகிறேன். 

எனவே, நான் சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரணநிதிக்கு வழங்கினேன், என்றார்.


Next Story