இறந்த மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்


இறந்த மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 31 May 2021 8:04 PM GMT (Updated: 31 May 2021 8:04 PM GMT)

மங்களமேடு அருகே இறந்த மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மங்களமேடு:

மூதாட்டி சாவு
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள வசிஸ்டபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டிக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி பெருமாயி(வயது 72). இவர், நேற்று முன்தினம் திட்டக்குடி வட்டம் பட்டூர் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார்.
இதையடுத்து நேற்று காலை அவரது உடலை சொந்த ஊரான ரெட்டிக்குடிக்காடு கிராமத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக, வசிஸ்டபுரம் வெள்ளாறு அருகே உள்ள சுடுகாட்டில் புதைப்பதற்காக குழிதோண்டி உள்ளனர்.
உடலை சாலையில் வைத்து...
இந்நிலையில் சுடுகாட்டிற்கு பக்கத்தில் அதே ஊரை சேர்ந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்தவரான ராஜேந்திரன் மனைவி வாசுகிக்கு (40) சொந்தமான இடம் உள்ளது. அங்கு உழவு வேலை செய்து கொண்டிருந்த வாசுகியின் தந்தை கந்தசாமி(68), குழி தோண்டி இருந்த இடத்தை மண்ணால் மூடி, அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது. அதனால் அங்கு புதைக்கக்கூடாது என்று கூறிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பெருமாயியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், அவரது உடலை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அகரம்சீகூர் பஸ் நிறுத்தம் அருகே வந்து சாலையில் உடலை வைத்து கோஷம் போட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், குன்னம் தாசில்தார் கிருஷ்ணராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்தர், வருவாய் ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அடக்கம்
அப்போது நாளை(புதன்கிழமை) நில அளவையர் கொண்டு நிலத்தை அளந்து பிரித்துக் கொடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பெருமாயியின் உடலை சாலையில் இருந்து தூக்கிச்சென்று, ஏற்கனவே குழி தோண்டப்பட்ட இடத்திற்கு சற்று தள்ளி அடக்கம் செய்து, இறுதிச்சடங்கு செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story