முசிறியில் ஒரே கிராமத்தில் 45 பேருக்கு கொேரானா


முசிறியில் ஒரே கிராமத்தில் 45 பேருக்கு கொேரானா
x
தினத்தந்தி 31 May 2021 8:52 PM GMT (Updated: 31 May 2021 8:52 PM GMT)

முசிறியில் ஒரே கிராமத்தில் 45 பேருக்கு கொேரானா உறுதி செய்யப்பட்டது

திருச்சி
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,300 பேர் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் சிறைக் கைதிகளை உறவினர்கள் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டு செல்போன் வீடியோ காலில் உறவினர்களுடன் பேசும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டது. மேலும், சிறைக் கைதிகளில் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தொடங்கியது.
இதேபோல் சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகளும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் பலருக்கு விரைவில் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்தநிலையில் சிறை காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் 11 பேருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முசிறி
முசிறி தாலுகா பெரமங்கலம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 290 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் 45 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முசிறி ஒன்றிய ஆணையர்கள் ராஜேந்திரன், ராஜ்மோகன், தண்டலைபுத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் சுகாதார துப்புரவு பணியாளர்கள் பெரமங்கலம் கிராமத்தில் சுகாதார பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே கிராமத்தில் 45 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story