சாலையை கடக்க முயன்ற குட்டியானை


சாலையை கடக்க முயன்ற குட்டியானை
x
தினத்தந்தி 1 Jun 2021 12:34 AM GMT (Updated: 1 Jun 2021 12:34 AM GMT)

குன்னூர் அருகே குட்டியானை கடக்க முயன்றது. அப்போது வீடியோ எடுத்தவரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னூர்

குன்னூர் அருகே குட்டியானை கடக்க முயன்றது. அப்போது வீடியோ எடுத்தவரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பலாப்பழ சீசன்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் தனியாருக்கு சொந்தமான தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் ஊடுபயிராக பலா மரங்கள் நடவு செய்யப்பட்டு இருக்கின்றன. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பலாப்பழ சீசன் தொடங்குவது வழக்கம். அந்த சமயத்தில் சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வருவது வாடிக்கையாக இருக்கிறது.

அப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை காட்டுயானைகள் கூட்டமாக கடந்து அந்த தோட்டங்களுக்கும், அருகில் உள்ள காப்புக்காடுகளுக்கும் செல்லும். இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

சாலையை கடக்க...

இதற்கிடையில் கொரோனா 2-வது அலையை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அவசர தேவைக்கு மட்டும் பொதுமக்கள் வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக வாகன போக்குவரத்து குறைந்து உள்ள நிலையில், காட்டுயானைகள் சுதந்திரமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வருகின்றன. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் காட்டுயானை கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டியானை ஒன்று, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை கடக்க முயன்றது.

பரபரப்பு

அப்போது அந்த வழியாக வாகனத்தில் சென்ற நபர், தனது செல்போனில் குட்டியானையை வீடியோ எடுத்தார். இதை கண்டு ஆவேசம் அடைந்த குட்டியானை திடீரென அவரை துரத்த தொடங்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அந்த நபர் தனது வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றார். பின்னர் அந்த குட்டியானை சாலையை கடந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வாகன போக்குவரத்து இல்லாததால், சாலைகளில் வனவிலங்குகள் சுதந்திரமாக உலா வருகின்றன. அவற்றை வீடியோ எடுப்பது, புகைப்படம் எடுப்பது என தொந்தரவு கொடுக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story