வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதிகளில் ஒருவர் கைது - தலைமறைவான 2 பேருக்கு வலைவீச்சு


வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதிகளில் ஒருவர் கைது - தலைமறைவான 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Jun 2021 4:14 AM GMT (Updated: 1 Jun 2021 4:14 AM GMT)

வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் இருந்து சப்-இன்ஸ்பெக்டரை தள்ளிவிட்டு தப்பி ஓடிய விசாரணை கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் அசோக் பில்லர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த வியாசர்பாடி போலீசார், அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றிய வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகள் அஜித்குமார் என்ற இட்டா அஜித் (வயது 24), அஜய்புதா (26) மற்றும் ஜெகதீஸ்வரன் (21) ஆகிய 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது. இதனால் 3 பேரையும் வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் இரவு முழுவதும் தங்கவைத்தனர்.

நேற்று முன்தினம் காலை விசாரணை கைதிகள் 3 பேரும் திடீரென அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ஜெயக்குமாரை கீழே தள்ளி விட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதையடு்த்து போலீசார் தனிப்படை அமைத்து 3 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று பெரம்பூர் ரெயில் நிலையத்தில் பதுங்கி இருந்த ஜெகதீஸ்வரனை மட்டும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள அஜித்குமார், அஜய்புதா இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story