கொரோனா தொற்று குறித்து கண்காணிக்க 100 வீடுகளுக்கு ஒரு பணியாளரை நியமிக்க அமைச்சர் உத்தரவு


கொரோனா தொற்று குறித்து கண்காணிக்க 100 வீடுகளுக்கு ஒரு பணியாளரை நியமிக்க அமைச்சர் உத்தரவு
x
தினத்தந்தி 2 Jun 2021 6:43 PM GMT (Updated: 2 Jun 2021 6:43 PM GMT)

கொரோனா தொற்று குறித்து கண்காணிக்க 100 வீடுகளுக்கு ஒரு பணியாளரை நியமிக்க வேண்டும் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உத்தரவிட்டார்.

கரூர்
ஆலோசனை கூட்டம்
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தீவிரமாகக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்து. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி முன்னிலை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 
119 மண்டலங்கள்
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கும் வகையில் தேவையான வசதிகளுடன் உள்கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கும், பொதுமக்கள் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
 கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளும் 119 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றார்கள்.
100 வீடுகளுக்கு ஒரு பணியாளர்
நோய்த்தொற்றுப் பரவலை முழுவதும் கட்டுப்படுத்த மைக்ரோ அளவில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தவேண்டியுள்ளதால், கரூர் மாவட்டத்தில் 100 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம் நியமித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு அலுவலருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 100 வீடுகளில் உள்ள குடும்பங்களின் நபர்களில் எவருக்கேனும் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளதா என்று தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா தொற்று அறிகுறி இருப்பின் உடனடியாக அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். 
கூடுதலாக ஆம்புலன்ஸ்கள்
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை அவசர கால ஊர்தியில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு சிசிக்சைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு கொரோனா தொற்றாளர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது. 
தேவை ஏற்படின் கூடுதலாக தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஒரு மாத காலத்திற்கு வாடகைக்கு எடுத்து பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்பாலகணேஷ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முத்துச்செல்வன், மண்டல அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story