அம்மன் கோவிலில் 4-வது முறையாக கொள்ளையர்கள் கைவரிசை


அம்மன் கோவிலில் 4-வது முறையாக கொள்ளையர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 3 Jun 2021 5:56 PM GMT (Updated: 3 Jun 2021 5:56 PM GMT)

நாகர்கோவிலில் அம்மன் கோவிலில் 4-வது முறையாக கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் அம்மன் கோவிலில் 4-வது முறையாக கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அம்மன் கோவில்
நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பூசாரி மட்டும் தினசரி பூஜைகளை செய்து வந்தார். 
நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பூஜைகள் முடிந்த பின்பு கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி வந்தபோது கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கோவில் கருவறையின் கதவுகள் உடைக்க முயற்சிக்க பட்டிருந்தது.
இதுகுறித்து பூசாரி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நிர்வாகிகள் கோவிலில் வந்து பார்த்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கண்காணிப்பு கேமரா ஆய்வு
விசாரணையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக காணிக்கை பணம் இல்லாததால் எதுவும் கொள்ளை போகவில்லை. மேலும், கோவில் கருவறை கதவை உடைக்க முடியாததால் உள்ளே இருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.
கோவிலில் 12 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் கொள்ளையர்கள் மின் இணைப்பை துண்டித்து விட்டு கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
இது தொடர்பாக ஊர்த்தலைவர் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
ஏற்கனவே 3 முறை கொள்ளை
வைத்தியநாதபுரம் முத்தாரம்மன் கோவிலில் ஏற்கனவே 3 முறை கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. தற்போது 4-வது முறையாக கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். ஏற்கனவே திருடிய ஆசாமிகள் தான் நேற்று முன்தினமும் வந்திருப்பார்கள் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story