கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் காதல் மனைவி கழுத்தை இறுக்கி கொலை-லாரி டிரைவர் கைது


கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் காதல் மனைவி கழுத்தை இறுக்கி கொலை-லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2021 5:32 PM GMT (Updated: 5 Jun 2021 5:32 PM GMT)

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் காதல் மனைவியின் கழுத்தை தாலி கயிற்றால் இறுக்கி கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கல்லாவி:
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காதல் திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள மல்லிப்பட்டியை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது31). லாரி டிரைவர். இவரது மனைவி ரஞ்சிதா (28). இவர்கள் 2 பேரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 
இவர்களுக்கு பவ்யா (7) என்ற மகளும், ஒரு மகனும் இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தொட்டியில் மூழ்கி மகன் இறந்து விட்டான். குடும்ப சூழ்நிலை காரணமாக அமல்ராஜ் பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ரஞ்சிதாவும் மல்லிப்பட்டியை சேர்ந்த நபர்களிடம் கடன் பெற்றிருந்தார். 
கள்ளக்காதல்
இதனிடையே ரஞ்சிதாவுக்கும், தர்மபுரி மாவட்டம் அரூரில் கிரானைட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தங்கராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த அமல்ராஜ், மனைவி ரஞ்சிதாவை கண்டித்தார். ஆனாலும் ரஞ்சிதா தங்கராஜுடன் தொடர்ந்து பழகி வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரஞ்சிதா வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமல்ராஜ் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் ரஞ்சிதா கிடைக்கவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் ரஞ்சிதா, கள்ளக்காதலன் தங்கராஜ் வீட்டில் இருப்பதாக அமல்ராஜுக்கு தகவல் கிடைத்தது.
கழுத்தை இறுக்கி கொலை
இதையடுத்து அமல்ராஜ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரஞ்சிதாவை தனது வீட்டிற்கு அழைத்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டின் பின்புறம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கள்ளக்காதல் மற்றும் கடன் பிரச்சினை தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அமல்ராஜ் தனது கையால் ரஞ்சிதாவின் கழுத்தை நெரித்தார். மேலும், தாலி கயிற்றாலும் அவரது கழுத்தை இறுக்கினார். இதில் நிலைகுலைந்த ரஞ்சிதா சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து தங்கராஜ் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் இரவில் வீட்டுக்கு வந்த அவர், மதுபோதையில் படுத்து தூங்கி விட்டார். 
இதனிடையே நேற்று காலை அக்கம்பக்கத்தினர் அமல்ராஜை எழுப்பி, ரஞ்சிதா வீட்டின் பின்புறம் இறந்து கிடப்பதாக தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்தமிழ் செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
கைது
இதைத்தொடர்ந்து அமல்ராஜை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் ரஞ்சிதாவை தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
கள்ளக்காதலை கைவிடாததால் காதல் மனைவியின் கழுத்தை தாலி கயிற்றால் இறுக்கி கணவரே கொலை செய்த சம்பவம் சிங்காரப்பேட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story