குளித்தலையில் மூட்டைகளாக கட்டி மணலை கடத்த முயன்ற சரக்கு வேன் பறிமுதல்


குளித்தலையில் மூட்டைகளாக கட்டி மணலை கடத்த முயன்ற சரக்கு வேன் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jun 2021 7:02 PM GMT (Updated: 5 Jun 2021 7:02 PM GMT)

குளித்தலையில் மூட்டைகளாக கட்டி மணலை கடத்த முயன்ற சரக்கு வேனை பறிமுதல் செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

குளித்தலை
ரோந்து பணி
கரூர் மாவட்டம், குளித்தலை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பாசன உதவியாளராக பணிபுரியும் லோகநாதன் மற்றும் ராஜப்பா ஆகியோர் குளித்தலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு தங்கள் பணி தொடர்பாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது குளித்தலை நாப்பாளையம் பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ள பகுதியில் ஒரு சரக்கு வேனில் சிலர் மணல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் வருவதைப் பார்த்த மணல் மூட்டை ஏற்றி கொண்டிருந்தவர்கள் வேனை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 
பறிமுதல்
பின்னர் மணல் மூட்டைகளுடன் அந்த வேனை பறிமுதல் செய்த பொதுப்பணித்துறை பணியாளர்கள் அதை தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த மணல் கடத்தல் தொடர்பாக லோகநாதன் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 
அதன் பேரில் இந்த மணல் திருட்டு தொடர்பாக குளித்தலை அருகே உள்ள தாளியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகின்றனர். 
பதுக்கி வைத்து...
குளித்தலை பகுதியில் பல இடங்களில் வாய்க்கால்களிலும், ஆறுகளிலும் மணலை மூட்டையாக கட்டி அதை மோட்டார் சைக்கிளில் வைத்து பலர் திருடிச்செல்வதும். சிலநேரங்களில் ஒரு இடத்தில் பதுக்கிவைத்து மொத்தமாக சரக்கு வேன்களில் ஏற்றி கடத்தி விற்பனை செய்வதும் வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. 
இதுபோல் மணல் திருட்டில் ஈடுபட்ட பலர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இந்த மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story