தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை


தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 8 Jun 2021 8:57 PM GMT (Updated: 8 Jun 2021 8:57 PM GMT)

தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

குளித்தலை
கொரோனாவை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு அறிவித்த ஊரடங்கு விதிமுறைகளை மீறி குளித்தலை பகுதிகளில் தேவையின்றி மோட்டார் சைக்கிள்களில் சுற்றித் திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அந்த வாகனங்களில் வருபவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பரிசோதனையின் முடிவில் அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்ற உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர்களின் வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசு ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்தநிலையில் குளித்தலை பகுதியில் துணைபோலீஸ் சூப்பிரண்டு சசிதர் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய காரணமின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றிய நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குளித்தலை பகுதியில் நேற்று மட்டும் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிபவர்களை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். வாகன சோதனையின்போது குளித்தலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசு, நகராட்சி ஆணையர் முத்துக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அமிர்தீன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story