‘சுஷாந்த் சிங் கஞ்சாவுக்கு அடிமையானவர்’ நடிகை ரியா வாக்குமூலம்


‘சுஷாந்த் சிங் கஞ்சாவுக்கு அடிமையானவர்’ நடிகை ரியா வாக்குமூலம்
x
தினத்தந்தி 9 Jun 2021 6:12 AM GMT (Updated: 9 Jun 2021 6:12 AM GMT)

‘சுஷாந்த் சிங் கஞ்சாவுக்கு அடிமையானவர்’ என நடிகை ரியா சக்கரவர்த்தி போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்து உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை, 

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஆண்டு ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் சிங் மரணம் குறித்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அப்போது சுஷாந்தின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் போதை பொருள் வாங்கியது, பயன்படுத்தியது, எடுத்து சென்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகை ரியா, அவரது தம்பி சோவிக், வீட்டு வேலைக்காரர்கள் உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகர் சுஷாந்த்சிங்கின் அக்காள் பிரியங்காசிங், மைத்துனர் சித்தார்த் ஆகியோரும் சுஷாந்த் சிங்குடன் சேர்ந்து கஞ்சா பயன்படுத்தினார்கள் என ரியா தெரிவித்து உள்ளார். மேலும் அவர் சுஷாந்த்சிங் கஞ்சா பயன்படுத்துவது அவரது குடும்பத்தினருக்கு தெரியும் எனவும், அவர்களே சுஷாந்திற்கு கஞ்சா வாங்கி கொடுத்து உள்ளனர் எனவும் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

இதேபோல தன்னுடன் பழகுவதற்கு முன்பே சுஷாந்த்சிங் கஞ்சாவுக்கு அடிமையாகி இருந்ததாகவும் ரியா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறும்போது, "ஒருவரின் வாக்குமூலத்தை வைத்து ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதற்கு வலுவான ஆதாரங்கள் வேண்டும். ரியாவின் வாக்குமூலம் குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.

Next Story