எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளித்து குறைகளுக்கு நிவாரணம் பெறலாம்


எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளித்து குறைகளுக்கு நிவாரணம் பெறலாம்
x
தினத்தந்தி 9 Jun 2021 4:00 PM GMT (Updated: 9 Jun 2021 4:00 PM GMT)

முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளித்து குறைகளுக்கு நிவாரணம் பெறலாம் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சாயல்குடி, 
முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளித்து குறைகளுக்கு நிவாரணம் பெறலாம் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறைபாடு

முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் போக்குவரத்து துறை அமைச்சருமான ராஜ கண்ணப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் சுகாதாரம், மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை குறைபாடுகளை முதுகுளத்தூரில் உள்ள சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களாக நேரடியாக வழங்கலாம். நேரில் வர இயலாதவர்கள் இணையதளம் மூலம் மனுக்களை அனுப்பலாம். 
அவர்களது குறைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களுக்கு அனுப்பப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து குறைகள் களையப்படும். கொரோனா தொற்று ஆரம்பம் முதல் முடியும் வரை முன் களப்பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் மற்றும் அரிசி மளிகை பொருட்கள் காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 
மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் காய்கறி தொகுப்புகளை வழங்கி வருகிறோம். தொகுதிக்கு உட்பட்ட ஏழை எளிய மக்கள் வேலை வாய்ப்பின்றி மற்றும் கூலித் தொழில் இல்லாமல் உணவின்றி கஷ்டப்படும் பொதுமக்கள் முதுகுளத் தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை தொடர்புகொண்டு உணவு பிரச்சினைக்கு தீர்வுகாணலாம்.

பாதுகாப்பு
 
தமிழகம் முழுவதும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்து நிவாரணம் பெற்றுள்ளனர். மனு அளித்து பயன் பெறாத முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் மனுக்களை அலுவலகத்தில் அளித்து பயன் பெறலாம். 
முதுகுளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் யாரேனும் மாவட்ட, மாநில பகுதிகளுக்கு வேலைகளுக்குச் சென்று தற்போது திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருந்தால் அவர்களின் விவரம் தெரியப்படுத்தினால் அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வந்து சேர்க்கப்படும். முதல்-அமைச்சர் கூறியதுபோல் அனைத்து பகுதி மக்களும் பாதுகாப்புடன் இருந்து கொரோனாவை எதிர் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story