சசிகலா தூண்டுதலில் எனக்கு கொலை மிரட்டல்


சசிகலா தூண்டுதலில் எனக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 9 Jun 2021 4:37 PM GMT (Updated: 9 Jun 2021 4:37 PM GMT)

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போலீசில் புகார்

திண்டிவனம், 

விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் நேற்று திண்டிவனம் ரோஷணை போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். 
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 7-ந்தேதி சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துகளை தெரிவித்தேன். அதற்கு சசிகலா நேரடியாக பதிலளிக்காமல் தன் அடியாட்களை வைத்து செல்போன் மற்றும் சமூக ஊடகங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் மூலம் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசியும், பதிவிட்டும் வருகின்றனர். 
மேலும் செல்போனிலும் என்னை அச்சுறுத்தும் வகையில் கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். இதுவரை சுமார் 500 அழைப்புகள் வந்துள்ளது. 
செல்போன், சமூக ஊடகங்கள் மூலம் எனக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வி.கே.சசிகலா பற்றி பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்துவிடுவோம் என மிரட்டும் தொனியில் பேசி வருகின்றனர்.
 இதற்கு சசிகலாவின் தூண்டுதலே காரணமாகும். எனவே கொலை மிரட்டல் விடுக்கவும், ஆபாசமாகவும் பேச காரணமாக இருந்த சசிகலா மீதும், என் செல்போனுக்கு வந்த அழைப்புகளில் பேசிய மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு மேற்கண்ட மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது வானூர் எம்.எல். ஏ. சக்கரபாணி உடனிருந்தார்.

Next Story