தென்னை மட்டை மில்லில் தீ


தென்னை மட்டை மில்லில் தீ
x
தினத்தந்தி 9 Jun 2021 4:53 PM GMT (Updated: 9 Jun 2021 4:53 PM GMT)

உடுமலை அருகே தென்னை மட்டை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

 தளி
உடுமலை அருகே தென்னை மட்டை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
தென்னைமட்டை மில்
உடுமலையை அடுத்த எரிசனம்பட்டியைச்சேர்ந்தவர் சித்ராதேவி (வயது 47). இவர் தென்னை மட்டைகளை கொண்டு மஞ்சி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னை மட்டைகளை விலைக்கு வாங்கி வந்து மஞ்சி தயாரித்து விற்பனைக்காக குவித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அவரது மில்லில் உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சியை விற்பனை செய்ய இயலவில்லை.
திடீர் தீ விபத்து
இந்த நிலையில் மின்கசிவு ஏற்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை மஞ்சியில் நேற்று திடீரென தீப்பிடித்துக் கொண்டது.   இதையடுத்து அருகில் இருந்த விவசாயிகள் சித்ராதேவிக்கு தகவல் தெரிவித்தனர்.  அத்துடன் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு அதிகாரி அரிராமகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் மஞ்சியில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை 1½ மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான தென்னை மஞ்சி எரிந்து சாம்பலாகி விட்டதாக உரிமையாளர் தெரிவித்தார்.

Next Story