தாறுமாறாக ஏறும் விலை: குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை நெருங்கியது கடலூரில் ரூ.98.88-க்கு விற்பனை


தாறுமாறாக ஏறும் விலை: குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை நெருங்கியது கடலூரில் ரூ.98.88-க்கு விற்பனை
x
தினத்தந்தி 9 Jun 2021 5:23 PM GMT (Updated: 9 Jun 2021 5:23 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது. குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை நெருங்கியது.கடலூரில் 98 ரூபாய் 88 காசுகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது.

கடலூர், 

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை தினசரி விலை நிர்ணயம் என்ற அடிப்படையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பு மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வந்தது.

அதன்பிறகு 3 எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது.

தாறுமாறாக...

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை விட கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு உள்ளது என்றே கூறலாம்.

 ஏனெனில் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 96 ரூபாய் 94 காசாக இருந்தது. டீசல் லிட்டர் 91 ரூபாய் 15 காசாக இருந்தது.
ஆனால் கடலூரில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 98 ரூபாய் 88 காசாகவும், டீசல் 93 ரூபாய் 02 காசாகவும் இருந்தது. அதைவேளை கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 26 காசுகளாகவும், டீசல் 93 ரூபாய் 38 காசுகளாகவும் இருந்தது. காட்டுமன்னார்கோவிலில் பெட்ரோல் 99 ரூபாய் 16 காசு, டீசல் 93 ரூபாய் 29 காசு என்கிற நிலையில் இருந்தது. இதன் மூலம்  ஓரிரு நாட்களில் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயை தாண்டி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

22 முறை உயர்வு

கடந்த மே மாதம் முதல் தற்போது வரை 22 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதன்படி பெட்ரோல் 4 ரூபாய் 51 காசும், டீசல் 5 ரூபாய் 40 காசும் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து தமிழ்நாடு பெட்ரோலிய வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் முரளி கூறியதாவது:-

லாபம்

3 எண்ணெய் நிறுவனங்கள் தான் பெட்ரோல், டீசல் விலையை தினசரி உயர்த்தி வருகிறது. அரசு விலை நிர்ணயம் செய்ததை மாற்றி, எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்ததால் தான் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. 

பெட்ரோல் விலை நிர்ணயம் செய்வதை கடந்த 2010-ம் ஆண்டும், டீசல் விலை நிர்ணயம் செய்வதை 2014-ம் ஆண்டும் எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டுமானால் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் லாபத்தை குறைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்க முன் வர வேண்டும். அப்போது தான் பெட்ரோல், டீசல் விலை குறையும். இந்த தினசரி விலை ஏற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றன. மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. மாவட்டத்திற்குள் விலை மாற்றம் என்பது போக்குவரத்து செலவுகளை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது.

காரணம் என்ன?

அதன்படி கடலூர் மாவட்டத்துக்கு சென்னை மண்டலத்தில் இருந்து பெட்ரோல், டீசல் வருகிறது. இதில் கடைசி பகுதியாக இருப்பது  காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஆகும்.

இதில் லாரிகளில் எடுத்துவரப்படுவதற்கான வாடகையை நிர்ணயம் செய்வதன் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களே  ஆன்லைன் மூலமாக விலையை நிர்ணயம் செய்கிறார்கள்.  அதன்படியே குமராட்சி பகுதியில் இந்த விலையில் விற்பனை நடைபெறுகிறது என்றார். 

Next Story